இந்தியா

தமிழகம் பிடித்துப்போக என்ன காரணம்?: பட்டியல் இடுகிறார் பிரதமர் மோடி

Published On 2024-04-01 08:39 IST   |   Update On 2024-04-01 08:39:00 IST
  • காசி தமிழ் சங்கமத்தைப் பொறுத்தவரை நான் காசியின் பாராளுமன்ற உறுப்பினர்.
  • தமிழ்நாட்டின் தலைவர்களே, தமிழகப் பாரம்பரியம், வரலாறு மீது பெருமைகொள்ளவில்லை.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து தந்தி டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

கேள்வி:- முந்தைய பிரதமர்களை விட, தமிழ் கலாசாரத்தின் மீது அதிக ஈர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். பல முறை இந்த ஆண்டிலேயே தமிழ்நாட்டுக்கு வந்துள்ளீர்கள். உங்கள் வாழ்வில் தமிழகத்திற்கு முதல்முறை வந்தது நினைவிருக்கிறதா?.

பதில்:- கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறேன். கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டப கட்டுமானம் நடக்கும்போது அங்கேயே இருந்திருக்கிறேன். 1975-ல் பிரதமர் இந்திராகாந்தி 'எமர்ஜென்சி' கொண்டுவந்தார். அப்போது நான் தலைமறைவாக இருந்த காலம். இயக்கத்தின் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக பல ஊர்களுக்கு போக வேண்டியிருந்தது. அப்போது தமிழ்நாட்டுக்கும் வந்துள்ளேன்.

கேள்வி:- கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டோடு தொடர்பில் இருப்பதாக கூறுகிறீர்கள். இங்கு மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?.

பதில்:- ஏராளமாக இருக்கின்றன. என்னை மிகவும் நெகிழ செய்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன். கன்னியாகுமரியில் தொடங்கிய எங்களது ஒற்றுமை யாத்திரை, கேரளாவை தொட்டு, திருப்பி தமிழ்நாடு வழியாக தொடர்ந்தது. அப்போது ஈரோடு பக்கத்தில் ஒரு ஊர். எந்த ஊர் என்று சரியாக நினைவில்லை. அங்கே சுதந்திர போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஒரு தியாகி... அதுவும் மிக இள வயதில் உயிர் தியாகம் செய்தவர். அவரது குடும்பத்தில் உள்ள 90 வயது அம்மையாரை பார்க்க நேர்ந்தது. அவர் எனக்கு ஆசீர்வாதம் கொடுக்க வந்தார். அங்கே அந்த தியாகியுடைய நினைவகத்திற்கு மரியாதை செலுத்த சென்றோம். அந்த இடத்தில் அந்த அம்மையார் காட்டிய உணர்ச்சி இருக்கிறதே... அது என்னை நெகிழச்செய்தது.

கேள்வி:- ஒருவேளை, அந்த தியாகி.. தேசியக்கொடி ஏந்தி உயிர்தியாகம் செய்த திருப்பூர் குமரனா?.

பதில்:- ஆமாம். சரியாக சொன்னீர்கள்.. திருப்பூர் குமரன்தான். அந்த மூதாட்டி அளித்த ஆசீர்வாதமும், அந்த அம்மையார் வெளிப்படுத்திய உணர்வுகளும் என்னை நெகிழச்செய்தது.

கேள்வி:- தமிழ்நாட்டிலேயே உங்களுக்கு பிடித்த விஷயம் என்றால் எதை சொல்வீர்கள்? மொழியா? கலாசாரமா? தமிழ் சாப்பாடா?.

பதில்:- அப்படி பிரித்தெல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழகம் பிடிக்கும். ஆனால் குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும் என்றால், முதலில் மொழி. என் மனதில் ஒரு பெரும் கோபம் இருக்கிறது. ஒரு பெரிய தமிழ் பாரம்பரியத்துக்கு நாம் அநியாயம் செய்திருக்கின்றோம். ஏதாவது ஒரு இடத்தில் டைனோசரோட முட்டை கிடைத்தால், அதை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். ஆனால் பாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு மொழி நம்மிடம் உள்ளது. அப்படிப்பட்ட புகழ் கொண்ட தமிழ் மொழியை நாம் உலகத்துக்கு சொல்லி பெருமையுடன் கொண்டாடவே இல்லை. இந்த விஷயம் என் மனதில் ஒரு வலியாகவே இருந்தது. அதனால், உலகத்திலேயே பழமையான மொழி எங்கள் தமிழ்மொழிதான் என்று உலகத்தோர் கூடியுள்ள ஐ.நா. அவையில் கூற முடிவெடுத்தேன். ஆனால், பாருங்கள், இப்போது நாட்டில் மொழி அரசியல் நடக்கிறது. நல்ல வேளை. இட்லி, தோசை அரசியல் ஆகவில்லை. இல்லையென்றால் அதையும் தமிழ்நாட்டோடவே முடக்கியிருப்பார்கள்.

இன்றைக்கு ஸ்ரீநகர் போனால் இட்லி தோசை கிடைக்குது. குஜராத்துல இட்லி, தோசையை விரும்பி சாப்பிடறாங்க. நாட்டின் எல்லா மூலையிலயும் இட்லி, தோசை கிடைக்குது. அவ்வளவு ஏன், உலகத்தோட எந்த மூலைக்கு போனாலும் இட்லி, தோசை பிரபலமா இருக்கு. எப்படி இட்லி தோசை உலகம் முழுக்க பரவி இருக்கோ, அதேபோல தமிழ் மொழியும் பரவ வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களால் தமிழை ஒரு பகுதிக்குள் முடக்கி வச்சுருக்காங்க. இதனால தமிழ் மொழிக்கு பெரிய பாதிப்பு. ஏன், இந்தியாவுக்கே இது பாதிப்புதான். இழப்புதான்.

கேள்வி:- ஒரு பிரதமராக தமிழை மையப்படுத்திய சில திட்டங்களை முன்னெடுத்துள்ளீர்கள். எடுத்துக்காட்டாக 'காசி தமிழ் சங்கமம், பாராளுமன்றத்தில் 'தமிழ் செங்கோலை நிறுவியது' போன்றவை. இவை உருவானது எப்படி?

பதில்:- காசி தமிழ் சங்கமத்தைப் பொறுத்தவரை நான் காசியின் பாராளுமன்ற உறுப்பினர். காசிக்கு நான் ஏற்கனவே பலமுறை சென்றிருக்கிறேன். காசியில் உள்ள படகோட்டிகளில் பலர் தமிழ் பேசுகிறார்கள். ஏனென்றால் அதிகபட்ச பயணிகள் தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறார்கள். மகாகவி பாரதியாரின் குடும்பம் இன்னும் காசியில் வசிக்கிறது. அவரும் சில காலம் காசியில் இருந்தவர்தான். எனவே, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் ஒரு இருக்கையை ஏற்படுத்தினேன். பிறகு 'காசி தமிழ் சங்கமம் நடத்த வேண்டும் என, எனக்கு தோன்றியது. அதன் மூலம் காசியில் தமிழ் பண்பாட்டை மக்கள் உணர வேண்டும் என எண்ணினேன். காசி தமிழ் சங்கமத்தில்தான், அதிக எண்ணிக்கையிலான தமிழ் புத்தகங்கள் விற்பனையாகின. காசி தமிழ் சங்கமம் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வாக எனக்கு தெரிகிறது.

செங்கோலை பொறுத்தவரை, இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த முதல் நொடியில், தமிழகத்தின் ஆதீனங்கள் பிரதமர் நேருவுக்கு, ஆட்சி மாற்றத்தின் குறியீடாக, இந்த செங்கோலைத் தந்தனர். ஆனால் இந்த செங்கோலின் பெருமை உணரப்படவில்லை. இந்த செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் கிடந்தது. அதை ஒரு 'வாக்கிங் ஸ்டிக்' என்று கொச்சைப்படுத்தினார்கள். இந்த விவகாரம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. நான் அதை அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு வந்தேன். தமிழகத்தின் ஆதீனங்களிடம் இது பற்றி பேசினேன். பல ஆய்வுகளுக்கு பிறகு, புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அந்த புனித செங்கோலை, சபாநாயகர் இருக்கையின் அருகில் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அது மட்டுமில்லை. அது அப்படியே ஒரு மூலையில் இருக்கக்கூடாது என்பதற்காக, ஒரு புதிய நடைமுறையே உருவாக்கினோம். ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரையாற்ற வரும்போது, ஜனாதிபதியின் முன்பு செங்கோல் எடுத்துச்செல்லப்படும். அதை உரிய இடத்தில் வைத்த பிறகுதான், ஜனாதிபதி தன் உரையை தொடங்குவார். இப்படி ஒரு புதிய சபை மரபையே இந்த ஆண்டு முதல் தொடங்கி வைத்துள்ளேன். தமிழகத்தில் இருந்து நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் இது. இதனை நாம் பெருமையாக நினைக்க வேண்டும்.

ஆனால், தமிழ்நாட்டின் தலைவர்களே இதை புறக்கணித்தார்கள். இதைவிட துரதிருஷ்டம் வேறு என்ன இருக்கமுடியும்? தமிழ்நாட்டின் தலைவர்களே, தமிழகப் பாரம்பரியம், வரலாறு மீது பெருமைகொள்ளவில்லை. இதனால், எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பதைப் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை.

கேள்வி:- அயோத்தி ராமர் கோவிலில் நுழையும்போது, முதல் தீப ஆராதனை செய்தபோது, உங்கள் மனதில் என்ன ஓடியது?.

பதில்:- அயோத்தி விழாவிற்கு ஆலய நிர்வாகிகள் என்னை வந்து அழைத்தபோது, அது என்னை நிலைகுலைய வைத்தது. ஒருவித ஆன்மிக உணர்வில் மூழ்க ஆரம்பித்தேன். இதனைப் பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று எதிரிகளாகப் பார்க்கப்படும் இந்த காலத்தில், இது சிலருக்கு நகைச்சுவையாகத் தெரியும். இதை எனக்கெதிரான ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தக்கூடும். ஆனால், எனக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம். அதன் பின்னர் நான் 11 நாட்கள் விரதம் இருக்க முடிவு செய்தேன். இந்த விரத நாட்களில் தென்னிந்தியாவில் பகவான் ஸ்ரீ ராமரோடு தொடர்புடைய எத்தனை இடங்கள் உள்ளனவோ அத்தனை இடங்களுக்கும் செல்லத் தீர்மானித்தேன். இந்த 11 நாட்களில் நான் எனக்குள்ளே பல மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். நான் அயோத்திக்கு வந்தபோது, அந்த ஆலயத்தில் ஒவ்வொரு அடி எடுத்துவைத்தபோதும், என் மனதுக்குள் எண்ணங்கள் ஓடின.

நான் பிரதமராக இருப்பதால், எனக்கு இந்த பாக்கியமா என நினைத்தேன். இல்லை, நான் என்னை ஒரு பாரதக் குடிமகனாக தான் நினைத்தேன். 140 கோடி மக்களின் பிரதிநிதியாக நினைத்தேன். சாதாரண ஒரு பக்தனைப் போலதான் உணர்ந்தேன். மனதில் இருந்தது எல்லாம் இந்த தேசம், 50 ஆண்டு கால போராட்டம், லட்சக்கணக்கான மக்களின் உயிர்த்தியாகம், லட்சக்கணக்கான மக்களின் தவம், 500 ஆண்டுகளாக பல தலைமுறைகளின் ஆசை, பக்தி, எண்ணம். இவை எல்லாம் பூர்த்தி ஆகிறது என்று நினைத்தேன்.

குழந்தை ராமரின் எதிரே நின்றபோது, முதலில் என்னுடைய பார்வை அவரது பாதத்தில் நிலைகொண்டது. அதன் பிறகு, அவரது கண்களை பார்த்தேன். அதன் பின்னர் என் பார்வை நகரவே இல்லை. அங்கேயே நின்றுவிட்டது. அங்கேயிருந்த பூசாரிகள் என்னை அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் எதிலும் என் மனம் செல்லவில்லை. இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, குழந்தை ராமர் என்னிடத்தில் ஏதோ சொல்வது போல் தோன்றியது. இந்தியாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது எனச் சொல்வதுபோலத் தோன்றியது. பசுமையான தினங்கள் தொடங்கிவிட்டன, பாரதத்தின் வளர்ச்சி தொடங்கிவிட்டது என சொல்வதுபோல் தோன்றியது.

கேள்வி:- அந்த 11 நாள் விரதத்தில், நீங்கள் தமிழ்நாட்டுக்கும் வந்தீர்கள். ஸ்ரீரங்கம் மற்றும் ராமேசுவரம் வந்த அனுபவத்தைப் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?.

பதில்:- ஸ்ரீரங்கத்தில்தான் கம்ப ராமாயணம் அரங்கேற்றப்பட்டது என அங்கிருந்த விவரம் அறிந்தவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள். அதே மண்டபத்தில் கம்பராமாயணத்தைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கேள்வி:- எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு என்னவென்றால், நீங்கள் இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தேர்தலுக்கு முன் திட்டமிட்டு நடத்தினீர்கள் என்பதுதான்...

பதில்:- இதோ பாருங்கள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்தது. அதன் அடிப்படையில்தான் ராமர் ஆலயம் கட்டப்பட்டது. அதனைக் கட்டியவர்கள் வேறு ஆட்கள். ஒரு தனியார் அறக்கட்டளை. அதனால், இந்த நேரத்தை கடவுளேதான் முடிவு செய்திருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, அதன் பின்னர் கட்டிட வேலை ஆரம்பம், குழந்தை ராமரின் பிராணபிரதிஷ்டை இவை அனைத்திலும் சரியாக நடந்தது என்றால், இதில் மனிதச் செயல்பாடு எங்கேயாவது தென்படுகிறதா? இது ஒரு முறைப்படி நடந்துள்ளது. தேர்தலுக்கு முன் இதெல்லாம் நடக்கும் என்று, தீர்ப்பு எழுதியவர் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

கேள்வி:- ராமர் ஆலயம் மற்றும் அது தொடர்பான விழாக்கள் எல்லாம், வட இந்தியர்களின் விழாக்கள் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சொல்கின்றனர். இதனால், தமிழ்நாட்டில் தாக்கம் ஏற்படாது என்கின்றனரே?.

பதில்:- இந்தியாவில் உள்ள கிராமங்களின் பெயர்பட்டியலை எடுத்துப்பாருங்கள். இந்த நாட்டில் ராமருடைய பெயருடன் தொடர்புடைய கிராமங்கள் பல இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ராமநாதபுரம். இந்த நாடு முழுவதும், எந்த மாநிலத்தில் இத்தகைய ராமர் தொடர்புடைய ஊர்கள் அதிகம் இருக்கிறது தெரியுமா? தமிழ்நாட்டில்தான். அயோத்திக்கு அருகே கூட இத்தனை ஊர்கள் இல்லை.

இப்போது சொல்லுங்கள், தொடர்பில்லை என்று சொல்பவர்களை என்ன சொல்வது? தென்னிந்தியாவில் இருக்கும் ஆண்களின் பெயர்களை பாருங்கள். ராமருடன் தொடர்புடைய பெயர்கள்தான் அதிகம் இருக்கும்.

கேள்வி:- உங்கள் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஊழல் பற்றி பேசிவருகிறீர்கள். இவை 10, 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை. இன்றும் இவை இந்திய மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா?

பதில்:- இந்தியக் குடிமக்கள், இந்த ஊழல் முதலிலேயே தடுக்கப்பட்டிருந்தால் இந்தியா எவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்கும்? என்று நினைக்கிறார்கள். இந்த ஊழல் அப்போது நடந்தது, அதைப்பற்றி இப்போது பேசுவதில் என்ன பயன் என நினைக்க மாட்டார்கள். ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களை தலைவர்களாக அமரவைத்து நாட்டை வழிநடத்த சிலர். இன்று ஊழல்வாதிகளை காப்பாற்ற பேரணிகள் நடத்தப்படுகின்றன. அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால், போதைபொருள் விற்பவர்கள் சிறை சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இன்று போதைப் பொருள் ஒரு பெரும் பிரச்சினையாக நம் முன்னே நிற்கிறது.

பணம் சம்பாதிக்க போதைப் பொருள் விற்கப்படுகிறது. அந்தப் பணப்பரிமாற்றத்தை அமலாக்கத்துறை தடுக்கிறது என்றால், அமலாக்கத்துறைக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News