மேற்குவங்கத்தில் வன்முறை பாதித்த பகுதிகளில் கவர்னர் அனந்த போஸ் ஆய்வு
- முர்ஷிதாபாத் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தனர்.
- வன்முறையால் பாதிக்கப்பட்ட மால்டா மாவட்டத்திற்கு கவர்னர் அனந்த போஸ் நேற்று சென்றார்.
கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அதன்பின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது. இதில் தந்தை, மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்தக் கலவரத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து சுதி, துலியன், சம்சர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் பகுதிகளில் பதற்றம் நிலவியது.
இதற்கிடையே, முர்ஷிதாபாத் வன்முறை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க மேற்குவங்க போலீசார் 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மால்டா மற்றும் முர்ஷிதாபாத் பகுதிக்கு கவர்னர் அனந்த போஸ் நேற்று ரெயிலில் சென்றார். அங்கு தற்காலிக முகாம்களில் உள்ள மக்களைச் சந்தித்துப் பேசிய அவர், வன்முறை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
வன்முறை பாதித்த பகுதிகளில் தேசிய மகளிர் ஆணைய தலைவி விஜயா ரஹாத்கர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.