இந்தியா

"நாங்கள் இந்திய ராணுவம்.." பயத்தில் அலறிய சுற்றுலாப் பயணிகளை சமாதானப்படுத்திய வீரர்கள் - வீடியோ

Published On 2025-04-23 14:33 IST   |   Update On 2025-04-23 14:33:00 IST
  • ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பெண்கள், மற்றும் குழந்தைகள் காயங்களுடன் விடப்பட்டனர்.
  • உங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்.

ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதலில் ஆண்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். பெண்கள், மற்றும் குழந்தைகள் காயங்களுடன் விடப்பட்டனர். தங்கள் கண்முன்னே குடும்பத்தினர் கொல்லப்பட்டது அவர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சம்பவத்தின் பின் தகவலறிந்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அப்போது பயந்துபோன சுற்றுலாப் பயணிகளை வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முயன்றபோது, உயிர் பிழைத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சிலர், வீரர்களை பயங்கரவாதிகள் என்று தவறாக நினைத்து அலறி அடித்து பின்வாங்கும் காணொளி வெளியாகி உள்ளது.

அதிர்ச்சி மற்றும் பயத்தில் அழுது அலறிய அவர்களிடம், "நாங்கள் இந்திய ராணுவம், உங்கள் பாதுகாப்பிற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம்" என்று கூறி சமாதானப்படுத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.  

Tags:    

Similar News