இந்தியா

இனிமேல் வக்ஃபு மசோதா இல்லை... UMEED என பெயரிடப்படும்: பாராளுமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

Published On 2025-04-02 14:50 IST   |   Update On 2025-04-02 15:46:00 IST
  • வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்ஃப் மசோதா தேவை.
  • 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்.

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் இன்று சிறுபான்மையினர் விவகாரத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்து பேசினார். இந்த திருத்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மசோதாவை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளன. ஒடிசா மாநிலம் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சியில் பாராளுமன்றத்தில் எதிர்க்கும். எங்களுடைய கோரிக்கைகள் பாராளுமன்ற கூட்டுக்குழுவால் நிராகரிக்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இனிமேல் வக்ஃபு மசோதா, ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு (Unified Waqf Management Empowerment, Efficiency and Development- UMEED) மசோதா என மறுபெயரிடப்படும் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களவையில் பேசும்போது "வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்தை அடைய வக்ஃப் மசோதா தேவை. 70 ஆண்டுகளாக வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்; நீங்கள் எவ்வளவு காலம் அவர்களை தவறாக வழிநடத்த விரும்புகிறீர்கள்?.

வக்ஃப் மசோதாவை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பவர்களையும் நாடு பல நூற்றாண்டுகளாக நினைவில் வைத்திருக்கும். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வக்ஃப் சொத்துக்கள் இந்தியாவில்தான் உள்ளன. வக்ஃப் சொத்துக்கள் தனியார் இயல்புடையவை, ரயில்வே, ஆயுதப்படைகளின் நிலங்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது" என்றார்.

Tags:    

Similar News