இந்தியா

வாக்கு திருட்டு: பெயர் விவரங்களை பகிர ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

Published On 2025-08-07 20:22 IST   |   Update On 2025-08-07 20:22:00 IST
  • ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது
  • தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று மதியம் டெல்லியில் இதுதொடர்பான சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்.

அதில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா சட்டமன்றத் தேர்தல், மக்களவை தேர்தல்களில் நடந்த முறைகேடுகள் குறித்த தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி ராகுல் விளக்கம் அளித்தார்.

அப்போது, மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இடையே 5 மாத இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக வந்ததாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் கர்நாடகாவில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஐந்து வெவ்வேறு வழிகளில் வாக்குகள் திருடப்பட்டது. இதன்படி 11,965 போலியான வாக்காளர்கள், போலியான மற்றும் தவறான முகவரியுடன் 40,009 வாக்காளர்கள், ஒரே முகவரியில் 10,452 வாக்காளர்கள், தவறான புகைப்படங்களுடன் கூடிய 4,132 வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ தவறாக பயன்படுத்திய 33,692 வாக்காளர்கள் உள்ளனர்.

ஒரு கட்டிடத்தில் 50-60 பேர் வசிப்பதாக பதிவாகி இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது, அந்த வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்தது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து கர்நாடக மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

அதில், கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை பற்றிய விவரங்களை பகிரும்படியும், அதில் கையெழுத்திட்டு, எழுத்துப்பூர்வ அறிக்கையை  தரும்படியும் கேட்டுக்கொள்ளபட்டது.

இதன்பின்னரே, இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தேர்தல் அதிகாரிகள் தொடங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News