துணை ஜனாதிபதி பதவி கேட்கவில்லை: பா.ஜனதா புகாருக்கு நிதிஷ் குமார் மறுப்பு
- நிதிஷ்குமார், பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.
- எனக்கு துணை ஜனாதிபதி பதவி மீது ஆசையே இல்லை.
பாட்னா :
பீகார் மாநிலத்தில் பா.ஜனதா ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடத்திய நிதிஷ்குமார், பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார். ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த பீகாரை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் சுஷில்குமார் மோடி, நிதிஷ்குமார் துணை ஜனாதிபதி ஆக விருப்பம் தெரிவித்ததாகவும், அதை பா.ஜனதா நிறைவேற்றாததால் அவர் கூட்டணியை விட்டு விலகி விட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில், நேற்று பாட்னாவில் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சுஷில்குமார் மோடி பெயரை குறிப்பிடாமல் பதில் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
இந்த மனிதர் (சுஷில்குமார் மோடி) நான் துணை ஜனாதிபதி ஆக விருப்பம் தெரிவித்தேன் என்று கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். என்ன ஒரு ஜோக். அது பொய். எனக்கு துணை ஜனாதிபதி பதவி மீது ஆசையே இல்லை.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களில் நாங்கள் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களைத்தான் ஆதரித்தோம்.
அவர் எந்த முக்கியமான பதவியிலும் இல்லாததால், என்னை விமர்சிப்பதன் மூலம் அவருக்கு ஏதாவது கிடைக்கலாம்.
அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.