இந்தியா

ஆந்திராவில் 2 குழந்தைகளை குட்டையில் தள்ளி கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்

Published On 2022-07-05 04:36 GMT   |   Update On 2022-07-05 04:36 GMT
  • சீனு சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் தினமும் குடித்துவிட்டு வந்து லட்சுமி தேவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். வீட்டு செலவிற்கு கூட பணம் தராமல் இருந்துள்ளார்.
  • இதனால் விரத்தி அடைந்த லட்சுமிதேவி தினமும் கணவரின் கொடுமையை அனுபவித்து உயிர் வாழ்வது விட சாவதே மேல் என நினைத்து நேற்று மாலை ஊருக்கு வெளியே உள்ள கல்குவாரி குட்டைக்குச் சென்றார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் மாவட்டம், வீர புண்ணாயன பள்ளி, பகுதியை சேர்ந்தவர் லட்சுமி தேவி (வயது 30). இவருக்கும் ராஜபாளையம் மண்டலும் புள்ளாரெட்டி பகுதியை சேர்ந்த சீனு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு அக்‌ஷயா (9), ரேவந்த் (7) என மகன், மகள் இருந்தனர்.

இவர்கள் எர்ரகுண்டல, மகேஸ்வர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சீனு சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் தினமும் குடித்துவிட்டு வந்து லட்சுமி தேவியை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார். வீட்டு செலவிற்கு கூட பணம் தராமல் இருந்துள்ளார்.

இதனால் விரத்தி அடைந்த லட்சுமிதேவி தினமும் கணவரின் கொடுமையை அனுபவித்து உயிர் வாழ்வது விட சாவதே மேல் என நினைத்து நேற்று மாலை ஊருக்கு வெளியே உள்ள கல்குவாரி குட்டைக்குச் சென்றார்.

குழந்தைகள் இருவரையும் கல்குவாரி குட்டையில் தள்ளிவிட்டார். இதில் 2 குழந்தைகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. பின்னர் தானும் குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த எர்ரகுண்டல போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமி தேவி மற்றும் அவரது குழந்தைகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News