காயம் அடைந்தவர் மீது சிறுநீர் கழித்த வாலிபர்- சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானதால் போலீசார் கைது செய்தனர்
- தாக்குதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
- தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆக்ரா:
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒருவரை வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கினார்.அந்த கும்பல் ஆபாசமாக திட்டியபடி அவரை கீழே தள்ளி தலையில் சரமாரியாக தாக்கினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் அப்படியே மயங்கி விட்டார்.
அதன் பிறகு தான் அந்த மோசமான சம்பவம் அரங்கேறியது. காயத்துடன் உயிருக்கு போராடியவர் மீது வாலிபர் சிறுநீர் கழித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இந்த தாக்குதலுக்கு ஆளானவரை பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று சேர்த்தனர். ஆனால் தாக்கப்பட்டவர் இது தொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தாக்குதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சுமார் 20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் இந்த செயலில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் ஆதிய்யா என்ற வாலிபர் சிக்கினார். போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பு நடந்ததாகவும், தற்போது தான் அந்த வீடியோ காட்சி வெளியானதாவும் போலீசார் தெரிவித்தனர்.