இந்தியா

வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி... மக்களவையில் சலசலப்பு

Published On 2026-02-02 14:46 IST   |   Update On 2026-02-02 14:46:00 IST
  • பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
  • புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று பராளுமன்றத்தில் உரையாற்ற தொடங்கியபோது, முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதியதாக கூறப்படும், இன்னும் வெளியிடப்படாத ஒரு புத்தகத்தை சார்ந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தி பேச தொடங்கினார். இது, ஆளும் பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

2020ஆம் ஆண்டு இந்தியா–-சீனா இடையே லடாக் எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதல் குறித்து எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அடங்கிய ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற வெளியிடப்படாத புத்தகத்தை ராகுல் காந்தி மேற்கோள் காட்டியதும், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனடியாக தலையிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

"வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டுவது அவை விதிகளுக்கு எதிரானது" என்று அவர் கூறினார்.

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் பதற்றம், 2020 மே 5ஆம் தேதி, பாங்காங் ஏரி பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்கு பிறகு தீவிரமடைந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெனரல் நரவணே தனது வெளியிடப்படாத நினைவு குறிப்புகளில் எழுதியுள்ளதாகவும், அந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு பிரபல இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த இதழின் அச்சு பிரதியை கையில் வைத்திருந்த ராகுல் காந்தி, புத்தகத்தில் உள்ள தகவல்கள் குறித்து பேச முயன்றார். ஆனால் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாராளுமன்ற விவகார துறை அமைச்சர் கீரன் ரிஜிஜு ஆகியோரும் அவரை கடுமையாக எதிர்த்தனர்.

தொடர்ச்சியான இடையூறுகளுக்கிடையே, ராகுல் காந்தி, "இதில் என்ன இருக்கிறது, அவர்களை இவ்வளவு பயமுறுத்துகிறது? அவர்கள் பயப்படவில்லை என்றால், நான் தொடர்ந்து வாசிக்க அனுமதிக்கப்பட வேண்டும்," என்றார். தான் மேற்கோள் காட்டிய கட்டுரையும் புத்தகமும் "100 சதவீதம் உண்மையானவை" என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

மேலும், "நாளை பாஜக உறுப்பினர்களும் வெளியிடப்படாத புத்தகங்களை சுட்டிக்காட்டி கற்பனை தகவல்களை முன்வைக்கலாம். ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் போலி செய்திகளை பரப்பும் தொழிற்சாலையாக மாறியுள்ளார்," என்றும் அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டின. இதனால் அவையில் ஏற்பட்ட கடும் அமளி மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News