ரோஜாவை முற்றுகையிட்டு ஜெய் அமராவதி கோஷம்
- ரோஜாவை ஜெய் அமராவதி என கோஷமிட வலியுறுத்தினர்.
- ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் இருந்து வெளியில் வந்தார்.
அப்போது, தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை அமைப்பின் கீழ் சேவை செய்யும் பெண் தன்னார்வலர்கள் அவரை முற்றுகையிட்டனர்.
அமராவதியை ஆந்திர தலைநகராக மேம்படுத்த வலியுறுத்தி, 'ஜெய் அமராவதி' என கோஷமிட்டனர். மேலும் ரோஜாவை ஜெய் அமராவதி' என கோஷமிட வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவிற்கு தலைநகராக அமராவதியை அப்போதைய முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இதையடுத்து அமராவதியை மேம்படுத்துவதில் ஈடுபட்டார். இதனால், அப்போதிருந்து 'ஜெய் அமராவதி' என தெலுங்கு தேசம் கட்சியினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி , மாநிலத்தில் 3 தலை நகரங்கள் அமைக்கப்படும் என்றார்.
இருப்பினும் தலை நகரங்கள் அமைக்கப்பட வில்லை. இதனால் மந்திரி ரோஜாவை தன்னார்வலர்கள் சூழ்ந்து, ஜெய் அமராவதி என கோஷம் எழுப்பினர்.
சிரித்துக்கொண்டே ரோஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.