இந்தியா

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்... இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

Published On 2024-11-08 10:44 IST   |   Update On 2024-11-08 10:44:00 IST
  • ராஞ்சி நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற இன்னும் 3 தினங்களே உள்ளன.

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

அது போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு வருகிற 13 மற்றும் 20-ந்தேதி 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் தற்போது தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் மாறி உள்ளது.

பிரதமர் மோடி மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 2 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளார். கடந்த வாரம் அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இன்று (வெள்ளிக்கிழமை) அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இன்று மதியம் 12 மணிக்கு அவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள துலே நகரில் பிரசாரம் செய்கிறார்.

அங்கு பிரசாரத்தை முடித்து விட்டு பிற்பகல் நாசிக் நகருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். அதன் பிறகு அவர் டெல்லி திரும்புகிறார்.

நாளை (சனிக்கிழமை) அவர் அகோலா, நந்தத் ஆகிய 2 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உள்ளார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மதியமும், பிற்பகலிலும் பிரதமர் மோடி பொகோரா மற்றும் கும்லா ஆகிய 2 ஊர்களில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அந்த 2 நகரங்களிலும் பிரமாண்டமான ரோடு ஷோவை அவர் மேற்கொள்கிறார்.

ராஞ்சி நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு இப்போதே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதையடுத்து மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 12-ந்தேதி முதல் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். அன்று அவர் சிமூர் மற்றும் சோலாபூர் நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை புனே நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்டமான ரோடுஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14-ந்தேதி அவர் சம்பஜிநகர், ராய்காட், மும்பை நகரங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் பிரதமர் 9 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். 2 இடங்களில் ரோடு ஷோ நடத்துகிறார். பிரதமர் மோடியை போலவே மத்திய மந்திரி அமித்ஷாவும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்வு பெற இன்னும் 3 தினங்களே உள்ளன. இதனால் அங்கு முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறும் 43 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.

Tags:    

Similar News