இந்தியா

நானே 5 ஆண்டுகளும் முதல் மந்திரியாக இருப்பேன்: சித்தராமையா உறுதி

Published On 2025-07-02 14:54 IST   |   Update On 2025-07-02 14:54:00 IST
  • சித்தராமையா ஆட்சி இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ளது.
  • முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு அங்கு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, முதல் மந்திரியை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது. அதன்பின், ஒருவழியாக சித்தராமையா முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். துணை முதல் மந்திரியாக டி.கே. சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களைச் சமாதானம் செய்ததாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே, சித்தராமையா ஆட்சி இரண்டு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் தற்போது முதல் மந்திரி மாற்றம் பற்றிய பேச்சு அங்கு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக அரசியலில் செப்டம்பருக்குப் பின் தலைகீழ் திருப்பம் ஏற்படும் என கூட்டுறவுத்துறை மந்திரி ராஜண்ணா சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆனால், கர்நாடகாவில் தற்போதைக்கு முதல் மந்திரி மாற்றம் குறித்து ஆலோசிக்கவில்லை என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 5 ஆண்டுகளும் நான் முழுமையாகப் பதவியில் இருப்பேன் என உறுதிபடக் கூறினார்.

மேலும், காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது. காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் பாறை போல் உறுதியாக ஆட்சியில் இருக்கும்.

ஆம், நான் ஆட்சியில் இருப்பேன். உங்களுக்கு ஏன் சந்தேகம்? என கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News