இந்தியா

சஞ்சய் ராவத்

3 மாத சிறைவாசத்துக்குபின் விடுதலை - சித்தி விநாயகர் கோவிலில் வழிபாடு நடத்திய சஞ்சய் ராவத்

Published On 2022-11-09 18:36 GMT   |   Update On 2022-11-09 18:36 GMT
  • சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
  • சஞ்சய் ராவத் சுமார் 100 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.

மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ம் தேதி வரை நீட்டித்த கோர்ட்டு, அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.

அதன்படி, சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, 100 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு சஞ்சய் ராவத் ஆர்தர் ரோடு சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த சஞ்சய் ராவத் பிரபாதேவி நகரில் உள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அவருடன் சிவசேனா கட்சி நிர்வாகிகளும் வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News