ஆர்.எஸ்.எஸ். வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட அமைப்பு: மாணிக்கம் தாகூர் எம்.பி.
- பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலிமைகளை பாராட்டி திக் விஜய் சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- காங்கிரஸ் தலைவர்கள் பல விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், மோடியின் படத்தை காண்பித்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமையை பாராட்டி பேசினார்.
தலைவர்கள் காலடியில் இருந்த ஒரு சாதாரண தொண்டன் முதல்வர் மற்றும் பிரதமராகியுள்ளார் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த அமைப்பு வலிமையாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு மற்ற தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து தற்போதுள்ள விசயங்கள் குறித்து பேசுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.
பின்னர், எக்ஸ் பக்கத்தில் திக் விஜய் சிங் விளக்கம் அளித்திருந்தார். அதில் நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை பாராட்ட வில்லை. அமைப்பின் வலிமையை சுட்டிக்காட்டினேன் எனத் தெரிவித்தார். இது பேசும்பொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக திக் விஜய் சிங்கை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். என்பது வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு அமைப்பு. அது வெறுப்பைப் பரப்புகிறது. வெறுப்பிலிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. அல்-கொய்தாவிடமிருந்து நீங்கள் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா? அல்-கொய்தா ஒரு வெறுப்பு அமைப்பு. அது மற்றவர்களை வெறுக்கிறது. அந்த அமைப்பிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?
நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், நல்லவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். 140 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சி இருக்கிறது. காங்கிரஸ் மக்களை ஒன்றிணைத்தது. மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்த அமைப்பு வெறுப்பு அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா?.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.