பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம்
மதுபான ஆலையை முற்றுகையிட்ட விவசாயிகள்- காவல்துறையினருடன் மோதலால் பரபரப்பு
- மதுபான ஆலை செயல்பட உள்ளூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு.
- மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் நீர் ஆதாரங்களை அழிப்பதாக குற்றச்சாட்டு.
பெரோஸ்பூர்:
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டம் மன்சுர்வால் கிராமத்தில் உள்ள மதுபான ஆலைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த தொழிற்சாலை உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் அப்பகுதி நீர் ஆதாரங்களையும் அழிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுபான ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அந்த பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்தது.
மதுபான ஆலையால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் விளைச்சல் குறைந்ததாகவும் குற்றம் சாட்டி, அந்த ஆலையின் வாயிலை இன்று முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்கார்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை காணப்பட்டது.