ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம்
- ரபேல் போர் விமானங்கள் செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
- அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரபேல் போர் விமானங்கள், செப்டம்பர் 2020-ல் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையில் முறையாக சேர்க்கப்பட்டன.
ஏப்ரல் 22-ந்தேதி நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின்போது ரபேல் ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அரியானா மாநிலத்தின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்தார்.
இதன் மூலம் ரஃபேல் போர் விமானத்தில் பறக்கும் முதல் இந்திய ஜனாதிபதியாகவும், இந்திய விமானப்படை வரலாற்றில் சிறப்பு சாதனை படைக்கும் பெண்மணியாகவும் திரவுபதி முர்மு பதிவாகி உள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரவுபதி முர்மு பயணம் செய்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் ஏபிஜே அப்துல் கலாம் மற்றும் பிரதிபா பாட்டீல் ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களில் பயணம் செய்து இருக்கின்றனர். இதனால், சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்த மூன்றாவது ஜனாதிபதி மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவார்.