கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
- உலகம் முழுவதும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி, உற்சாகத்தின் பண்டிகை என ஜனாதிபதி முர்மு தெரிவித்தார்.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அத்துடன், புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியது.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
நாட்டு மக்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிறிஸ்துமஸ் என்பது மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் பண்டிகை. அது அன்பு மற்றும் கருணையின் செய்தியை உலகிற்கு சொல்கிறது. மனித குலத்தின் நன்மைக்காக இயேசு கிறிஸ்து செய்த தியாகத்தை கிறிஸ்துமஸ் நினைவுபடுத்துகிறது.
இந்தப் புனிதமான பண்டிகை அமைதி, சமத்துவம், சமாதானம் மற்றும் சேவையின் மதிப்புகளை பறைசாற்றி, நம்மை ஊக்கப்படுத்துகிறது.
இயேசு கிறிஸ்து நமக்கு காட்டிய பாதையைப் பின்பற்றி அன்பு மற்றும் பரஸ்பர சமாதானம் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்காக உழைக்க வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.