காந்திநகர்-மும்பை இடையே வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கம்- பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- பொதுமக்களுடன் பிரதமர் ரெயிலில் பயணம் செய்தார்.
- அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
காந்திநகர்:
குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி 2வது நாளாக இன்று காலை மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரெயிலை கொடியசைத்து தொடக்கி வைத்தார். காந்திநகர்-மும்பை இடையே இயக்கப்படும் இந்த ரெயிலில், ரெயில்வே ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களுடன் அகமதாபாத் வரை பிரதமர் பயணம் செய்தார்.
நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ரெயில் நாட்டின் இயக்கப்படும் 3-வது வந்தே பாரத் விரைவு ரெயில் ஆகும்.
இதைத் தொடர்ந்து அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் அசைத்து தொடங்கி வைத்தார். மாலையில் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.