பிரதமர் மோடி அடுத்த வாரம் ஜோர்டான் உள்பட 3 நாடுகளுக்கு பயணம்
- முதல் கட்டமாக டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார்.
- இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி 16-ம் தேதி எத்தியோப்பியா செல்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல் கட்டமாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் மோடி ஜோர்டான் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ஜோர்டான் மன்னருடன் இருநாட்டு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி 16-ம் தேதி எத்தியோப்பியா செல்கிறார். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலியைச் சந்தித்து பிரதமர் மோடி இந்தியா-எத்தியோப்பியா இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்து உள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக 17-ம் தேதி பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு செல்கிறார். அந்நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் 2-வது சுற்றுப்பயணம் இதுவாகும். இந்தப் பயணத்தின்போது இந்தியா-ஓமன் இடையிலான வர்த்தகம், முதலீடுகள், இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.