இந்தியா

பிரதமர் மோடி, அதிபர் புதின்

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் - அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

Published On 2022-12-16 18:58 GMT   |   Update On 2022-12-16 18:58 GMT
  • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
  • அப்போது, உக்ரைன் போரில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என வலியுறுத்தினார்.

புதுடெல்லி:

இந்தியா, ரஷியா உச்சிமாநாடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்த உச்சி மாநாடு ரஷியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உக்ரைன் போர் காரணமாக இந்தியா, ரஷியா உச்சி மாநாடு குறித்த அறிவிப்பை ரஷியா வெளியிடவில்லை.

இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

உக்ரைன் போர் குறித்து அதிபர் புதினிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என மோடி வலியுறுத்தி உள்ளார்.

ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றது குறித்தும், இந்தியா-ரஷியா இடையிலான ஆற்றல் ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து புதினிடம் பிரதமர் மோடி பேசியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ரஷிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடியிடம் உக்ரைன் போர் தொடர்பான ரஷியாவின் அடிப்படை மதிப்பீடுகள் குறித்து ரஷிய அதிபர் புதின் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News