ஐடி துறையில் ஈடுபட விரும்புகிறதா பதஞ்சலி ஆயுர்வேத்?
- 2022 நிதியாண்டில் ரோல்டா, ரூ.7100 கோடி கடன்களை கட்ட தவறியது
- அஷ்தன் பிராபர்டீஸ், ரோல்டாவிற்கு அதிக விலை தர முன்வந்தது
1989ல் கமல் சிங் என்பவரால் தொடங்கப்பட்ட மென்பொருள் சேவை நிறுவனம், ரோல்டா (Rolta).
மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள ரோல்டா, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, மின்சாரம், நிதி உள்ளிட்ட பல துறைகளில் மென்பொருள் சேவைகளை வழங்கி வந்தது.
2016ல் முதல் முறையாக அன்னிய செலாவணி கடன்களை கட்ட தவறியது.
2022 நிதியாண்டுக்கு ரோல்டா ரூ.1000 கோடி நஷ்டத்தை பதிவு செய்தது.
இந்திய யூனியன் வங்கிக்கு ரோல்டா, ரூ.7100 கோடி கடன்பாக்கி வைத்துள்ளது.
2023 ஜனவரி மாதம் ரோல்டா, கடனை திருப்ப செலுத்த இயலாத நிறுவனம் என அறிவிக்கப்பட்டு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடனை சரி கட்ட, தீர்ப்பாயம், ரோல்டாவை விற்பனை செய்ய முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டது.
ரோல்டாவை வாங்க முன்வந்தவர்களில் மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த அஷ்தன் பிராபர்டீஸ் (Ashdan Properties) எனும் நிறுவனம்தான் அதிக தொகையை தர முன்வந்தது.
இந்நிலையில், 2006ல் ஹரித்வாரை மையமாக கொண்டு பிரபல யோகா வல்லுனர், பாபா ராம்தேவ் உருவாக்கி தற்போது ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி வரும் பதஞ்சலி ஆயுர்வேத் (Patanjali Ayurved) நிறுவனம், ரோல்டாவை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பாயத்தில், ரோல்டாவை வாங்க ரூ.830 கோடி வரை தர பதஞ்சலி ஆயுர்வேத் முனைந்துள்ளது.
மும்பையில் ரோல்டாவிற்கு உள்ள கட்டிடங்களை வினியோகத்திற்கு பயன்படுத்தவோ அல்லது மென்பொருள் துறையில் நுழையவோ பதஞ்சலி திட்டமிடலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.