அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு: முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு
- அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றார்.
- முதல் மந்திரி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல் மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது:
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதற்காக பீகார் இளைஞர் ஆணையத்தை அமைக்கலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்தல், அவர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அதிகாரம் பெற்ற, திறமையானவர்களாக மாற்ற ஆலோசனைகள் வழங்குவதே இந்த ஆணையத்தின் நோக்கம்.
மது, போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை தடுக்க திட்டங்கள் வகுப்பதும் ஆணையத்தின் பணிகளாகும்.
மாநிலத்தில் அதிக பெண்கள் பணியிடத்தில் நுழைந்து ஆட்சி, நிர்வாகத்தில் பெரிய பங்கு வகிப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.