இந்தியா

தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது பாராளுமன்றம்

Published On 2022-08-03 13:38 GMT   |   Update On 2022-08-03 13:38 GMT
  • பரிசோதனை திறனை கணிசமாக அதிகரிக்க புதிய சட்டம் உதவும் என மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தகவல்
  • தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதாவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

புதுடெல்லி:

தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா-2022 கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் அந்த மசோதாவை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை மந்திரி அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது இன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது.

விவாதத்திற்கு பதிலளித்து மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் பேசினார். அப்போது, தற்போது நாட்டில் ஆண்டுக்கு 6,000 பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும், இந்த பரிசோதனை திறனை கணிசமாக அதிகரிக்க புதிய சட்டம் உதவும் என்றார்.

'எந்தவொரு பெரிய சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துதாக இருந்தாலும், ஒரு மாதத்திற்கு 10,000 சோதனைகள் மேற்கொள்ளவேண்டியிருக்கும். இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம், விளையாட்டுகளில் ஊக்கமருந்து தடுப்பு தொடர்பான சட்டங்களை கொண்டுள்ள அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேரும்' என்றார் அனுராக் தாக்கூர்.

விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகள் முன்வைத்த பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

தேசிய ஊக்க மருந்து தடை முகமை மற்றும் தேசிய ஊக்க மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு சட்ட வடிவம் அளிக்கும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News