கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் ரத்து
- 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பாஜக குற்றம் சாட்டியது.
- இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வந்தார்.
14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், நில ஒதுக்கீடு நடந்ததில் முறைகேடு வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவியை லோக் ஆயுக்தா நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முறையான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சித்தராமையாவின் மனைவிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நில ஊழல் வழக்கில் ஆதாரமில்லை என லோக் ஆயுக்தா கூறிவிட்ட நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.