தாய் மீது போலீஸ் நிலையத்தில் 'புகார்' கொடுத்த 3 வயது சிறுவன்
- மாவட்ட எஸ்.பி., சிறுவனின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
- இதில் ‘ஹைலைட்’டான இன்னொரு விஷயமும் நடந்துள்ளது.
போபால் :
தன்னை திட்டிய தாய் குறித்து 3 வயது சிறுவன் போலீசில் 'புகார்' கொடுத்திருக்கிறான்.
இந்த ருசிகர சம்பவம், மத்தியபிரதேச மாநிலத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள தேதலாய் கிராமத்தில் நடந்திருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அங்குள்ள போலீஸ் நிலையத்தின் முன் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக் அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர், குட்டிப்பையன் ஒருவனுடன் அங்கு வருவதை கண்டார். அவர்கள் அப்பா-மகன் என்பதை அறிந்தார்.
அடுத்து அந்த சிறுவன் மழலை மொழியில் சொன்னதுதான் சப்-இன்ஸ்பெக்டரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
'நான் எங்கம்மா மேல கம்ப்ளெய்ன்ட் குடுக்கணும்.'
'திட்டுறாங்க...'
தொடர்ந்து நடந்த உரையாடல் வருமாறு...
'ஏன் செல்லம்?'
'அவங்க... நான் குளிச்சதும் என்னோட நெத்தியில திலகம் வைக்க விடலைன்னு திட்டுறாங்க... என் மிட்டாயையெல்லாம் திருடிக்கிட்டாங்க...'
'அப்படியா?'
'ஆமா...'
சிறுவன் கூறிய புகாரை ஒரு தாளில் எழுதினார் சப்-இன்ஸ்பெக்டர்.
'நீ சொன்ன புகாரை எழுதியாச்சு... இதில நீ கையெழுத்து போடணும்.'
பொடியனும் 'கையெழுத்து' (சில கோடுகள்) போட்டான்.
அம்மா மீது புகார் கொடுக்க வேண்டும் என்று மகன் வற்புறுத்தியதால் அவனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்ததாக தந்தை புன்னகையுடன் கூறினார். கண்டிப்பாக 'நடவடிக்கை' எடுப்பதாக சிறுவனுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களை அனுப்பிவைத்தார் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்ததால் பலரது கவனத்தை ஈர்த்தது.
மாவட்ட எஸ்.பி., சிறுவனின் தந்தையை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
சிறுவனிடம் கனிவோடு விசாரித்து அனுப்பிய பெண் சப்-இன்ஸ்பெக்டரையும், போலீஸ் நிலையத்துக்கு யாரும் அச்சமின்றி வரலாம் என்று காட்டியிருக்கிறார் என எஸ்.பி. பாராட்டினார்.
இதில் 'ஹைலைட்'டான இன்னொரு விஷயமும் நடந்துள்ளது. சிறுவன் போலீஸ் நிலையம் சென்ற வீடியோவை பார்த்த மாநில உள்ளாட்சித்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா, நேற்று வீடியோ காலில் சிறுவனை தொடர்புகொண்டு உரையாடினார். அப்போது, தீபாவளிக்கு அவனுக்கு ஒரு சைக்கிளும், சாக்லேட்டுகளும் அனுப்புவதாக கூறியிருக்கிறார்.