பிரதமர் மோடி நேரு சாதனையை நிச்சயம் முறியடிப்பார்: ராம்தாஸ் அத்வாலே
- ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
- நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பீகாரில் பிரசாரம் செய்வேன் என்றார்.
பாட்னா:
இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே பீகார் மாநிலத்தின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று முதல் மந்திரி நிதிஷ்குமாரைச் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர் சந்திப்பில் ராம்தாஸ் அதவாலே பேசியதாவது:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். நிதிஷ்ஜி ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலுஜியை விட நிச்சயமாக ஆரோக்கியமானவர். நான் இருவருடனும் நண்பர்களாக இருந்திருக்கிறேன்.
நிதிஷ்ஜி இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு இருப்பார் என நினைக்கிறேன். பீகாரில் எனது கட்சி வலுவாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் தேசிய ஜனநாயக கூட்டணிக்காக பிரசாரம் செய்வேன்.
பிரதமர் நரேந்திர மோடி ஜவகர்லால் நேருவின் சாதனையை முறியடித்து, தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வார்.
ஊழல் இல்லாத அரசாங்கத்தை நடத்தி வரும் நரேந்திர மோடி தலைமையிலான குழுவில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
அவரது ஆட்சிக் காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறோம்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு திரும்பியதன் மூலம் மோடி ஏற்கனவே நேருவின் சாதனையை சமன் செய்துள்ளார். அவர் நேருவின் சாதனையை முறியடித்து நான்காவது முறையாக ஆட்சியை அனுபவிப்பார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.