திருமணத்தை பதிவு செய்ய காத்திருந்த மணமகனுக்கு ட்விஸ்ட் கொடுத்த மணமகள்
- கடந்த ஒரு மாதமாக தொலைபேசியில் பேசி காதலை வளர்த்து வந்தார்.
- நீரஜ் குடும்பத்தினரால் திருமணத்தின்போது அப்பெண்ணுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் பரிசாக அளிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் தனது திருமணத்தை பதிவு செய்ய காத்திருந்த மணமகன், தனது மனைவி மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹர்தோய் மாவட்டத்தின் சாண்டியில் உள்ள நவாப்கஞ்சில் வசிக்கும் நீரஜ் குப்தா என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாபா என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்யத் தயாரானார். அந்த பெண்ணை பார்த்ததும் பிடித்துப்போக கடந்த ஒரு மாதமாக தொலைபேசியில் பேசி காதலை வளர்த்து வந்தார்.
இதனை தொடர்ந்து, நீரஜ் குடும்பத்தினரால் திருமணத்தின்போது அப்பெண்ணுக்கு ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் பரிசாக அளிக்கப்பட்டது. இதை அடுத்து கடந்த திங்கட்கிழமை திருமணத்தை பதிவு செய்ய நீதிமன்றத்திற்கு சென்ற போது நீரஜ் மற்றும் அப்பெண்ணும் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் சில புகைப்படங்களை எடுத்துள்ளனர். அதன்பின் திருமணத்தை பதிவு செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு அப்பெண்ணும், அப்பெண்ணை அறிமுகம் செய்தவருமான பாபாவும் காணாமல் போயினர்.
நீரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அப்பெண்ணை பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அப்பெண்ணையும், பாபாவையும் தேடி வருகின்றனர்.