காஷ்மீரில் மேலும் ஒருவர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு தொடர்கிறது
- பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த 15 பேர் உதவி செய்தது தெரியவந்தது.
- பாண்டி போரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஜமீல் அகமது வீடு உள்ளது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.
நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் , ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தி உள்ளனா்.
பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 100-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையாக முதலில் 2 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
அதை தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பிற வெடி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் மேலும் 4 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. பாண்டி போரா, புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் வீடுகளை தகர்த்தனர்.
சோபியான் மாவட்டத்தில் உள்ள வாண்டினா பகுதியில் பயங்கரவாதி அத்னன் ஷபி வீடு உள்ளது. அவன் கடந்த ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். அவனது வீடு இடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தில் உள்ள அமீர் நசீர் என்ற பயங்கரவாதியின் வீடு தகர்க்கப்பட்டது.
பாண்டி போரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஜமீல் அகமது வீடு உள்ளது. 2016-ம் ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அவனது வீட்டை பாதுகாப்பு படை வீரர்கள் இடித்து தரைமட்டமாக்கினார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பயங்கரவாதி பரூக் அகமது வீடு குப்வாரா மாவட்டம் கலாரசில் உள்ளது. அவனது வீட்டை அதிகாரிகள் குண்டு வைத்து தகர்த்தனர்.
கடந்த 48 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த 15 பேர் உதவி செய்தது தெரியவந்தது. இதில் முக்கியமான 3 நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே பயங்கரவாதிகளின் அட்டூழியம் காஷ்மீரில் தொடர்கிறது. சமூக ஆர்வலர் அவர்கள் சுட்டுக்கொன்றனர்.
குப்வாரா மாவட்டம் காந்திதாஸ் பகுதியை சேர்ந்தவர் குலாம் ரசூல். 45 வயதான அவர் சமூக ஆர்வலர் ஆவார். நள்ளிரவில் அவரது வீட்டை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சமூக ஆர்வலரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கான காரணம் தெரியவில்லை. இதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.