இந்தியா

சுனு

6 முறை சஸ்பெண்டு செய்யப்பட்ட பின்னரும் பாலியல் வழக்குகளில் சிக்கிய இன்ஸ்பெக்டர் அதிரடி டிஸ்மிஸ்

Published On 2023-01-10 04:48 GMT   |   Update On 2023-01-10 04:48 GMT
  • சுனு மீதான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
  • கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த், புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சுனுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த பைப்பூர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுனு.

இவர் மீது ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக உயர் அதிகாரிகள், இவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தனர்.

பின்னர் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் சுனு மீதான புகார்கள் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் சுனு தனது பணிக்காலத்தில் கிரிமினல்களுடன் தொடர்பு வைத்திருந்ததும், இதற்காக 6 முறை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

அதன்பின்பும் சுனு தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டது உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. எனவே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் போலீஸ் டி.ஜி.பி.க்கு பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த், புகாருக்கு ஆளான இன்ஸ்பெக்டர் சுனுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் இன்ஸ்பெக்டர் சுனுவுக்கு போலீஸ் பணியில் நீடிக்க தகுதி இல்லை எனவும் தனது உத்தரவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கிடையே பணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கோர்ட்டில் முறையிடப்போவதாக சுனு தெரிவித்துள்ளார்.

தன்மீது ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது. அதனையும் விரைந்து முடிக்க கேரள ஐகோர்ட்டை அணுக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News