இந்தியா

பிரதமரை பார்த்தே ஆகனும்.. கான்வாயை இடைமறித்து ஓடிய நபரால் பரபரப்பு!

Published On 2023-09-23 19:52 GMT   |   Update On 2023-09-23 19:52 GMT
  • பிரதமர் மோடி லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.
  • பிரதமர் கான்வாய் குறுக்கே ஓடி வந்த நபர், பா.ஜ.க.-வை சேர்ந்தவர்.

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் இடையூறு ஏற்பட்டது. மர்ம நபர் ஒருவர் பிரமதர் நரேந்திர மோடியின் கான்வாயை இடைமறித்து ஓடியதால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பிரதமர் மோடியின் கான்வாய் வாரணாசியின் ருத்ராக்ஷ் செண்டர் வந்த போது, இந்த சம்பவம் அரங்கேறியது.

பிரதமர் கான்வாய் குறுக்கே ஓடி வந்த நபர், பா.ஜ.க.-வை சேர்ந்த கிருஷ்ண குமார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. காசியாப்பூரை சேர்ந்த கிருஷ்ண குமார், பிரதமர் மோடியின் கான்வாய் அருகே செல்ல முயன்ற நிலையில், பாதுகாப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் அவரை விரைந்து சென்று பிடித்தனர். பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவர் ஓடி வந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

"பா.ஜ.க. கட்சியின் மூத்த உறுப்பினர் பரத் குமாரின் மகன், கிருஷ்ண குமார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார், மேலும் பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க விரும்பியுள்ளார்," என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக வாரணாசியில் உருவாக இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்திருந்தார். இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமான பணிகள் டிசம்பர் 2025 வாக்கில் நிறைவுபெறும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News