இந்தியா

மகாராஷ்டிராவின் முதல் எதிரி அமித்ஷா: உத்தவ் தாக்கரே கட்சி நாளேடு தாக்கு

Published On 2023-02-22 03:17 GMT   |   Update On 2023-02-22 03:17 GMT
  • அமித்ஷாவின் கருணை இருந்ததால் ஷிண்டேக்கு சின்னம் கிடைத்தது.
  • சிவசேனா இப்பொழுதும், எப்போழுதும் தாக்கரேக்கு சொந்தமானது தான்.

மும்பை :

தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது. இதனால் கட்சியின் பெயர், சின்னத்தை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கட்சி பறிகொடுத்துள்ளது.

இதையடுத்து தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக மாறி உள்ளது என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார். அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா வந்து இருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தான் மகாராஷ்டிராவின் முதல் எதிரி என உத்தவ் தாக்கரேயின் கட்சி நாளேடான 'சாம்னா' பத்திரிகையில் கடுமையாக தாக்கி எழுதப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிவசேனாவின் பெயர், சின்னத்தை வாங்கிய பிறகு, தாமரையின் கால்கள் உடையும் வரை பா.ஜனதா ஆட்டம் போட்டது. ஏக்நாத் ஷிண்டே அணியை விட பா.ஜனதா தான் மகிழ்ச்சி அடைந்தது. டெல்லியின் கால் அடியில் விழுந்து கிடக்கும் மனநிலையில், தாக்கரேயால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட சிவசேனாவை தேர்தல் ஆணையம் ஒப்படைத்து உள்ளது.

சத்ரபதி சிவாஜி ஜெயந்தி அன்று ஷிண்டேக்கு சிவசேனா சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்தார். அமித்ஷாவின் கருணை இருந்ததால் ஷிண்டேக்கு சின்னம் கிடைத்தது. அதை தற்போது அவர் மறைக்கிறாரா?. இந்த மனிதர் (அமித்ஷா) மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா மக்களுக்கு முதல் எதிரி. தங்கள் சொந்த ஆசைகளை அமித்ஷாவுக்கு பின்னால் நின்று மறைப்பவர்களும் மகாராஷ்டிராவின் எதிரிகள் தான். சிவசேனா இப்பொழுதும், எப்போழுதும் தாக்கரேக்கு சொந்தமானது தான். மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்கவும். வில், அம்பு சின்னத்தை வாங்கவும் ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்து உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News