தகுதியானவர்களுக்கு நிச்சயம் வீடு கிடைக்கும்: துணை முதல் மந்திரி சிவகுமார் உறுதி
- கோகிலு பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிசம்பர் 20-ம் தேதி அகற்றப்பட்டன.
- மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் யலஹங்கா கோகிலு பகுதியில் பக்கீர் காலனி, வசீம் லே அவுட் ஆகிய இடங்களில் பொது இடங்களில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் டிசம்பர் 20-ம் தேதி அகற்றப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், கோகிலுவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு நடவடிக்கையின்போது இடிக்கப்பட்ட உண்மையான நபர்களுக்கு மாற்று வீடுகளை வழங்குவதற்கான மாநில அரசின் முடிவை கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே. சிவகுமார் இன்று ஆதரித்தார். அதே நேரத்தில் திருப்திப்படுத்தும் அரசியல் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.
அந்த வீடுகளில் வசித்தோருக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது. தகுதியானவர்களுக்கு நிச்சயம் வீடு கிடைக்கும். அதுவரை அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். ஆக்கிரமிப்புகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இல்லை.
ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பிறகு தகுதியுள்ள உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே நிவாரணம் என்பது மனிதாபிமான நடவடிக்கை என வலியுறுத்திய அவர், சட்டவிரோத ஆக்கிரமிப்பு இடங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு விரைந்து நிவாரணம் வழங்கவேண்டும் என சில பா.ஜ.க. தலைவர்களும் சில பிரிவினரும் வலியுறுத்தி வருகின்றனர்.