இந்தியா

காப்பீட்டு பணத்துக்காக பித்தலாட்டம்.. பொம்மைக்கு இறுதிச் சடங்கு - உ.பி.யில் வெளிவந்த பலே மோசடி

Published On 2025-11-28 20:48 IST   |   Update On 2025-11-28 20:54:00 IST
  • நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர்.
  • பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார்.

உத்தர பிரதேசத்தில் காப்பீட்டுப் பணத்திற்காக போலியான இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள கர்முக்தேஷ்வர் கங்கா காட் பகுதிக்கு நான்கு பேர் ஒரு இறந்த உடலை தகனத்திற்காக கொண்டு வந்தனர்.

சடங்குகளின்படி இறுதிச் சடங்கை செய்வதற்குப் பதிலாக, உடலை நேரடியாகச் சிதைக்கு எடுத்துச் சென்று தகனத்தைத் தொடங்கினர்.

நால்வரும் சந்தேகப்படும்படி நடந்து கொண்டதால், உள்ளூர்வாசிகள் தகனத்தை நிறுத்தினர். உடலில் இருந்த துணிகள் அகற்றப்பட்டபோது, ஒரு பிளாஸ்டிக் போலி உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் உள்ளூர்வாசிகள் அவர்களில் இருவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.

போலீசார் பிடிபட்ட இருவரை விசாரித்தபோது, அதிர்ச்சியூட்டும் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

கைது செய்யப்பட்ட டெல்லியின் கைலாஸ்புரியைச் சேர்ந்த துணிக்கடை நடத்தி வந்த கமல் சோமானி ரூ.50 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து தப்பிக்க, அவர் தனது நண்பர் ஆஷிஷ் குரானாவுடன் ஒரு திட்டம் தீட்டினார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கமல் சோமானி, முன்பு தன்னிடம் பணிபுரிந்த அன்ஷுல் குமாரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளை பய்னபடுத்தி ஒரு வருடம் முன்பு, அன்ஷுலின் பெயரில் ரூ.50 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டுக் கொள்கையை வாங்கி, பிரீமியத்தை தவறாமல் செலுத்தினார். காப்பீட்டுத் தொகையைப் பெற, அன்ஷுல் இறந்துவிட்டதாகக் காட்ட போலி இறப்புச் சான்றிதழைப் பெற்றார்.

பின்னர், நண்பர்களின் உதவியுடன், தான் உடலை தகனம் செய்வதாக அனைவரையும் நம்ப வைக்க போலி இறுதிச் சடங்கு செய்ய முயன்றார்.

போலீசார் அன்ஷுலைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தனது பெயரில் பாலிசி இருப்பது கூட தெரியாது என்றும் கூறினார்.

இதன் மூலம், கமல் சோமானி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News