இந்தியா

ஒட்டுமொத்த மாநில மக்களும் உண்மை பக்கம் இருப்பார்கள் என்று நம்புகிறேன்: கமல்நாத்

Published On 2023-11-17 02:46 GMT   |   Update On 2023-11-17 02:46 GMT
  • காங்கிரஸ் தலைவர் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • பாஜக-விடம் காவல்துறை, பணம் மற்றும் நிர்வாகம் உள்ளது என கமல்நாத் விமர்சனம்.

230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் மத்திய பிரதேச மாநில தலைவரும், முன்னாள் முதல்வரும், சிந்த்வாரா தொகுதி வேட்பாளருமான கமல்நாத் கூறுகையில் "ஒட்டுமொத்த மாநில மக்களும் உண்மையின் பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொதுமக்கள், வாக்காளர்களை நான் நம்புகிறேன். நாங்கள் வெற்றி பெறுவோம், நாங்கள் அதிக இடங்களை பிடிப்போம் என சொல்வதற்கு, நான் சிவராஜ் சிங் அல்ல. இடங்களின் எண்ணிக்கையை பொதுமக்கள் முடிவு செய்வார்கள்.

பாஜக-விடம் காவல்துறை, பணம் மற்றும் நிர்வாகம் உள்ளது. இன்னும் சில மணி நேரங்களுக்கு அது அவர்களிடம் இருக்கும். நேற்று எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன. யாரோ ஒருவர் எனக்கு மது மற்றும் பணம் விநியோகிக்கப்படுவதைக் காட்டும் வீடியோவை அனுப்பி வைத்திருந்தார்" என்றார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், கமல்நாத் முதல்வராக வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதலமைச்சராக பதவி ஏற்றார். உள்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.-க்கள் பிரிந்து சென்றதால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

Tags:    

Similar News