திருப்பதி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சாமி வீதி உலா
- இன்று மாலை ஏழுமலையான், கிருஷ்ணர் தனித்தனி வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா 2 நாட்கள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெகு விமரிசையாக நடந்தது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று திருப்பதி கோகர்ணம் அணையில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இன்று மாலை ஏழுமலையான், கிருஷ்ணர் தனித்தனி வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுவதால் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்து இருந்தது.
திருப்பதியில் நேற்று 58,855 பேர் தரிசனம் செய்தனர். 29,014 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கடந்த மாதம் திருப்பதி அலிபிரி நடைபாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் இதுவரை 5 சிறுத்தைகள் சிக்கி உள்ளன. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து மலைப்பாதையில் கூண்டு வைத்துள்ளனர்.
மேலும் நடைப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு கம்பு வழங்கப்பட்டு வருகிறது. அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க 300 ஊழியர்கள் பணியில் உள்ளனர்.