கேதார்நாத் கோவில் நடை திறப்பு - உத்தரகாண்ட் முதல்வர் பங்கேற்பு
- உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
- குளிர் காலத்தில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.
உத்தரகாண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. குளிர் காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும்.
கோடை காலத்தில் மட்டுமே 4 கோவில்களும் திறக்கப்படும். இந்த கோவில்களுக்கு பக்தர்கள் செல்லும் யாத்திரை, 'சார்தாம்' யாத்திரை என அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர் காலத்தில் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.
அதன்படி இந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஏப். 30-ந்தேதி 'சார்தாம்' யாத்திரை தொடங்கியது. நேற்று கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கேதார்நாத் கோவில் நடை இன்று காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸின் இசைக்குழு பக்தி பாடல்களை இசைத்தது.
கேதார்நாத் கோவிலில் திறக்கப்பட்டதையடுத்து தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.