கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.ரஹ்மான் கான் அளித்த பேட்டியில், " இன்று ஒரு பெரிய நாள். காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. காங்கிரசுக்கு 120 இடங்களுக்கு மேல் பெரும்பான்மை கிடைக்க வேண்டும். முடிவுக்கு முந்தைய கருத்துகணிப்பில் மட்டுமல்ல, களத்திலும் காங்கிரஸின் வெற்றி தெரியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்" என்றார்.
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, பாஜக முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும், தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த முதல்வர் குறித்து தெரியவரும் என்றும் கூறினார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதால், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
மொத்தம் 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜனதா தள மதச்சார்பற்ற கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி, " தேர்தல் முடிவின் முந்தைய கருத்துக்கணிப்புகளை நம்ப வேண்டாம். முடிவுகள் வரும்போது என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். தேர்தல் முடிவை மக்களிடம் விட்டுவிடுகிறேன்" என்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக 7.45 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட்டன.
கர்நாடக சட்டசபையில் உள்ள 224 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கியது.