இந்தியா

நீதிபதி ஜே.பி. பார்திவாலா    உச்சநீதிமன்றம்

தீர்ப்புகளில் பொது மக்களின் கருத்தை பிரதிபலிக்க முடியாது- உச்சநீதிமன்ற நீதிபதி

Published On 2022-07-03 16:55 GMT   |   Update On 2022-07-03 16:55 GMT
  • சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்.
  • டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

லக்னோவின் டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக் கழகம், ஒடிசாவின் தேசிய சட்டப் பல்கலைக் கழகம், தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களுக்கான முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு உள்ளிட்டவை இணைந்து நடத்திய தேசிய கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பார்திவாலா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நீதிமன்ற தீர்ப்புகள் பொதுமக்கள் கருத்துகளின் பிரதிபலிப்பாக இருக்க முடியாது, எனவே உச்ச நீதிமன்றமே சட்டத்தின் ஆட்சியை மனதில் வைத்து செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஜனநாயகத்தை நான் நம்புகிறேன். ஜனநாயகத்தில் சட்டம் மிகவும் முக்கியமானது. லட்சுமண ரேகையை கடந்து, நீதிபதிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வது ஆபத்தானது என்பதால், அரசியலமைப்பின் கீழ் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க நாட்டில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ஒரு நீதிபதி, ஒரு விதிவிலக்கான வழக்கில், சமூகத்தின் உணர்வுகளையும், அவர் வழங்கப் போகும் தீர்ப்பின் விளைவையும் அறிந்திருக்க வேண்டும். நீதிபதிகள் சமூக வலைதள விவாதங்களில் பங்கேற்கக் கூடாது, நீதிபதிகள் தங்கள் நாக்கின் மூலம் ஒருபோதும் பேச மாட்டார்கள், அவர்களின் தீர்ப்புகளை மட்டுமே பேசுவார்கள்.

நீதித்துறையின் பங்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் பங்கும் மக்களால் நிலைநிறுத்தப்படும் புனிதமான நம்பிக்கையாகும். சட்டத்தின் ஆட்சி என்பது இந்திய அரசியலமைப்பின் தனிச்சிறப்பு அம்சமாகும். நாடாளுமன்ற முறைகள் இல்லாத நாடுகளிலும்  சட்டத்தின் ஆட்சி உள்ளது. ஒரு சர்வாதிகாரம் கூட சட்டத்தின்படி ஆட்சி செய்வதாகக் கூறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News