பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு
- பதவிக்காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்க பாஜக தேசிய செயற்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது
- 2019 தேர்தல் வெற்றியை விட, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெறும்
புதுடெல்லி:
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் முன்று ஆண்டு பதவிக்காலம் இந்த மாதம் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் இந்த ஆண்டு நடைபெற உள்ள 9 மாநில சட்டமன்ற தேர்தல்களை கருத்தில் கொண்டு கட்சித் தலைமையில் மாற்றம் செய்யாமல், நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜக செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக இது தொடர்பாக பரவலாக தகவல் வெளியானது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் பாஜக செயற்குழு கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று பாஜக தலைவரின் பதவி நீட்டிப்பு குறித்த அறிவிப்பை மூத்த தலைவர் அமித் ஷா வெளியிட்டார்.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்க பாஜக தேசிய செயற்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பின்போது அமித் ஷா கூறினார். 2019 மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றியை விட, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் நட்டா தலைமையில், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெறும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.