ஏழை, நடுத்தர மக்களுக்காக குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரெயில்- விரைவில் இயக்க இந்திய ரெயில்வே முடிவு
- ரெயில்களின் முழு ரேக்குகளும் எல்.எச்.பி. பெட்டிகளாக இருக்கும்.
- ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள், விபத்துக்குள்ளானால் உயிரிழப்பு வாய்ப்புகளை முழுமையாக குறைக்கிறது.
புதுடெல்லி:
பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அசாம், அரியானா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பலர் பிழைப்பு தேடி பெரு நகரங்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
இவர்கள் வசதிக்காக குறைந்த கட்டணத்தில் சிறப்பு ரெயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரெயில்வே திட்டமிட்டு உள்ளது. தற்போது உள்ள ரெயில் கட்டணம் ஏழை, நடுத்தர மக்களுக்கு சற்று அதிகமானதாக கருதப்படுவதால் ரெயில் நிர்வாகம் இதுபற்றி ஆய்வு செய்தது.
இதை தொடர்ந்து படுக்கை வசதிகளுடன் கூடிய பொதுப்பெட்டிகளுடன் புதிய ரெயில்கள் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு பெரு நகரங்களுக்கு இடையே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் உருவாக்கப்படும் இந்த ரெயில்களின் கட்டணமும் சிக்கனமாக இருக்கும். இந்த ரெயில்களின் முழு ரேக்குகளும் எல்.எச்.பி. பெட்டிகளாக இருக்கும்.
ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட எல்.எச்.பி. பெட்டிகள், விபத்துக்குள்ளானால் உயிரிழப்பு வாய்ப்புகளை முழுமையாக குறைக்கிறது. இந்த சிறப்பு ரெயில்கள் ஓரிரு ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த ரெயில்களில் குறைந்தது 25 சிறப்பு பொது படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும் என்று இந்திய ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.