இந்தியா

ஜம்மு எல்லையில் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2025-05-09 11:44 IST   |   Update On 2025-05-09 11:44:00 IST
  • இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்:

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இதையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. மேலும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சித்து வருகிறார்கள்.

அதை முறியடிக்க இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று பஞ்சாப் மாநில எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில் ஜம்முவில் எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஜம்முவின் சம்பா பகுதியில் உள்ள எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News