மது குடிக்க பணம் கேட்டு தொல்லை: மருமகனை துண்டு துண்டாக வெட்டி கொன்ற கசாப்பு கடைக்காரர்
- மது போதைக்கு அடிமையான ராஜு மது குடிப்பதற்காக அடிக்கடி கடையில் பணத்தை திருடி வந்தார்.
- ராஜுவின் தொல்லை எல்லை மீறி போகவே ஆத்திரம் அடைந்த ஸ்ரீனு கடையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராஜுவின் கழுத்தை அறுத்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அனக்கா பள்ளி, பரவாடா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ னு (வயது 48). இவர் கணபர்த்தி என்ற பகுதியில் கசாப்பு கடை நடத்தி வந்தார்.
இவரது தங்கை மகன் லோவ ராஜூ (30). இவரது பெற்றோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் மாமா ஸ்ரீனு வீட்டில் வசித்து வந்தார். மேலும் கறிக்கடையில் மாமாவுக்கு உதவி செய்து வந்தார்.
மது போதைக்கு அடிமையான ராஜு மது குடிப்பதற்காக அடிக்கடி கடையில் பணத்தை திருடி வந்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராஜு நர்சி பட்டினத்தில் உள்ள வேறு கறிக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மாமாவின் கறிக்கடைக்கு வேலைக்கு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இருவரும் இறைச்சி கடை அருகே மது அருந்தினர். அப்போது ராஜு மாமாவிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
ராஜுவின் தொல்லை எல்லை மீறி போகவே ஆத்திரம் அடைந்த ஸ்ரீனு கடையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ராஜுவின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
மேலும் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்தார். அதிகாலை ராஜுவின் வெட்டப்பட்ட உடலை மறைவான இடத்திற்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீனுவை பிடித்து அவர் வைத்திருந்த உடல் உறுப்புகளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்தனர்.