மன்மோகன் சிங் நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கப்படும்: மத்திய அரசு
- மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கும் என்றது மத்திய அரசு.
- மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படுகிறது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
மன்மோகன் சிங்கின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் 28ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் தெரிவித்தது.
இதற்கிடையே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். நினைவிடம் அமைப்பது அவருக்கு அளிக்கும் அஞ்சலி என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடம் அமைக்க அரசு இடம் ஒதுக்கும். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.