இந்தியா

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஆளுநர் நடத்திய தர்ணா

Published On 2024-01-27 07:07 GMT   |   Update On 2024-01-27 09:57 GMT
  • கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் இன்று கொல்லம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.
  • அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக, இடதுசாரி மாணவர் அமைப்பு அடிக்கடி போராட்டங்களை நடத்திவருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்டுவது, ஆர்ப்பாட்டம் செய்வது போன்றவற்றில் இடதுசாரி மாணவர் அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மாணவர்கள் போராடிய போது, தனக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று கொல்லம் அருகே கொட்டாரக்கரை சதானந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றார். அவர் கொல்லம் நிலமேல் என்ற பகுதியில் சென்றபோது, அவரது காரை கருப்புக் கொடியுடன் மாணவர் அமைப்பினர் மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக, ஆளுநர் ஆரிப் முகமது கான் திடீரென தனது காரில் இருந்து இறங்கினார். தனது பாதுகாப்பு வளையத்தை மீறி, அங்குள்ள டீக்கடைக்கு சென்ற அவர், அங்கிருந்த சேரை எடுத்து சாலையில் போட்டு அமர்ந்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

போலீசார் தனக்கு சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஆளுநர் ஆரிப் முகமது கான், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யாததற்கு கண்டனம் தெரிவித்தார். காவல்துறையினர் சட்டத்தை மீறினால், யார் சட்டத்தை நிலைநாட்டுவார்கள் என அவர் கேள்வி எழுப்பியதோடு, நான் இங்கிருந்து செல்லமாட்டேன் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

இதற்கிடையில் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News