null
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் இந்திய வங்கிகளுக்கு கடன்பட்டுள்ள தொகை ரூ.58,082 கோடி - மத்திய அரசு
- இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது
- கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட நாட்டை விட்டு தப்பி ஓடிய 15 பொருளாதார குற்றவாளிகள் பொதுத்துறை வங்கிகளுக்கு மொத்தம் ரூ.58,082 கோடி கடன்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மக்களவையில் எம்.பி ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி இதனைத் தெரிவித்தார்.
இந்த மொத்த நிலுவைத் தொகையில், அசல் தொகை ரூ.25,645 கோடி, அதே நேரத்தில் அதற்கான வட்டி ரூ.31,437 கோடியை எட்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை, இந்த குற்றவாளிகளின் சொத்துக்களில் இருந்து 33 சதவீதம், அதாவது ரூ.19,187 கோடி மீட்கப்பட்டுள்ளது. இன்னும் ரூ.38,895 கோடி வசூலிக்கப்பட வேண்டி உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உட்பட மொத்தம் 12 பொதுத்துறை வங்கிகளுக்கு அவர்கள் கடன்பட்டுள்ளனர்.
கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜய் மல்லையா ரூ.11,960 கோடியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தத் தொகையை அவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு மட்டும் கடன்பட்டுள்ளார்.
அவருக்குப் பிறகு, வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,799 கோடி கடன்பட்டுள்ளார். அவர்களுடன் சேர்ந்து, சந்தேசரா குழுமமும் ரூ.900 கோடி முதல் ரூ.1,300 கோடி வரை கடன் வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018 இன் கீழ் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே விஜய் மல்லையா, மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி அவ்வப்போது லண்டனில் பார்ட்டி நடத்தி நடனமாடி கொண்டாடும் வீடியோக்கள் வெளியான வண்ணம் உள்ளன.