ராஜஸ்தானில் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பயங்கரம்
- கடந்த நவம்பர் முதல் ஒரு வருட விசாவில் இந்தியாவில் இருக்கிறார்.
- குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார்
ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத் தலமான உதய்பூரில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன ஊழியர் ஒருவர் பிரெஞ்சு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நகரில் சிறப்பு வாய்ந்த இடங்களை சுற்றிக் காட்டுவதாகக் கூறி, அவர் அப்பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்று இந்தக் கொடுமையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பிரெஞ்சு பெண், மற்ற இரண்டு பெண் தோழிகளுடன் உதய்பூருக்கு ஒரு விளம்பரப் படப்பிடிப்பிற்காக வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விளம்பரப் படப்பிடிப்பை ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அப்பெண் கடந்த நவம்பர் முதல் ஒரு வருட விசாவில் இந்தியாவில் இருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, பாதிக்கப்பட்ட பிரஞ்சு பெண், அவரது நண்பர்கள் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சில ஊழியர்கள் உதய்பூரின் புட்கான் பகுதியில் உள்ள டைகர் ஹில்ஸில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றனர். அனைவரும் இரவு உணவு சாப்பிட்டதாகவும், அங்கு மது அருந்தியதாகவும் தெரிகிறது.
பின்னர், அந்த ஊழியர்களில் ஒருவரான சித்தார்த் நகரத்தை சுற்றிக்காட்டுவதாக கூப்பிட்ட அழைப்பில் பேரில் தான் அவருடன் காரில் சென்றதாகவும், அவர் தன்னை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி யோகேஷ் கோயல் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார் எனவும் உணவகம் மற்றும் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
சம்பவம் குறித்து பிரெஞ்சு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அன்று உணவகத்தில் இருந்த மற்றவர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.