குடும்ப அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்.. நேரு குடும்பத்தை விமர்சித்த சசி தரூர்!
- தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.
- கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
'குடும்ப அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்' என்ற தலைப்பில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். குடும்ப ஆட்சியிலிருந்து இந்தியா விலகி தகுதி அடிப்படையிலான தலைமைக்கு மாற வேண்டும்.
குடும்ப அடிப்படையிலான அரசியல் பொறுப்புணர்வை பலவீனப்படுத்துகிறது. நிர்வாகத்தின் தரத்தை குறைக்கிறது மற்றும் தலைவர்கள் திறமைகளை விட குடும்பப் பெயர்களை நம்பியிருக்க அனுமதிக்கிறது.
இத்தகைய குடும்பங்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய நிதி ஆதாயங்களை ஈட்டியுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில், 40 வயதுக்குட்பட்ட எந்த எம்.பி.யும் குடும்ப வம்சாவளி இல்லாமல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
149 அரசியல் குடும்பங்கள் மாநில சட்டமன்றங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்றும், 11 மத்திய அமைச்சர்கள் மற்றும் ஒன்பது முதலமைச்சர்கள் குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளனர் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளதாக தரூர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் தனது கட்டுரையில், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்யை தொடர்ந்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட வாரிசுகளின் செல்வாக்கு, அரசியல் தலைமை என்பது மரபுரிமையாகக் கிடைத்த ஒரு உரிமை என்ற கருத்தை வளர்த்துள்ளது.
காங்கிரஸ் மட்டுமின்றி, சிவசேனா, சமாஜ்வாடி கட்சி, லோக் ஜனசக்தி கட்சி, சிரோமணி அகாலிதளம், மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக மற்றும் பாரத ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகளும் இதற்கு சான்று என்றும் தரூர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சிகளில் வெளிப்படையான உள்கட்சித் தேர்தல்கள், சட்டப்பூர்வ கால வரம்புகள் மற்றும் தகுதி அடிப்படையிலான தலைமையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் தேவை என்றும் சசி தரூர் தனது கட்டுரையில் வலியுறுத்தி உள்ளார். இந்த கட்டுரை காங்கிரசார் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.