சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் கைது- கொரோனா சிகிச்சை மைய முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை
- மும்பை ஆசாத் மைதான் போலீசாரின் வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது.
- சமீபத்தில் மும்பையில் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் சுஜித் பட்கர் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை நடத்தினர்.
மும்பை:
மும்பையில் 2020-ம் ஆண்டு கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உத்தவ் தாக்கரே கட்சி .பி. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் சுஜித் பட்கர் போலி ஆவணங்கள் மூலம் கொரோனா சிகிச்சை மைய ஒப்பந்தத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக மும்பை ஆசாத் மைதான் போலீசாரின் வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. சமீபத்தில் மும்பையில் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் சுஜித் பட்கர் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை நடத்தினர். இந்தநிலையில் அமலாக்கத்துறையினர் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் சுஜித் பட்கர் மற்றும் டாக்டர் கிஷோர் பிசுரேயை அதிரடியாக கைது செய்தனர். டாக்டர் கிஷோர் பிசுரே தகிசர் ஜம்போ கொரோனா சிகிச்சை மைய டீனாக இருந்தவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட இருவரும் பணமோசடி தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து மோசடி குறித்து விசாரணை நடத்த அவர்களை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. இதையடுத்து கோர்ட்டு வருகிற 27-ந்தேதி வரை அவர்களை அமலாக்கத்துறை காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டது.