இந்தியா

பிரதமர் ஆகும் ஆசை இல்லையா? என சிறுவர்களிடம் கேள்வி கேட்ட மோடி

Published On 2023-05-04 08:23 IST   |   Update On 2023-05-04 08:23:00 IST
  • பிரதமர் மோடி கலபுரகி டவுனில் திறந்தவாகனத்தில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினார்.
  • பிரதமர் மோடி கலபுரகி டி.ஆர். மைதானத்தில் போலீசாரின் சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.

கலபுரகி :

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நாள் ஒன்றுக்கு 3 பிரசார பொதுக்கூட்டங்களிலும், ஒரு 'ரோடுஷோ' நிகழ்ச்சியும் நடத்தி வருகிறார். இது பா.ஜனதா தொண்டர்களை உற்சாகமடைய வைத்திருப்பதுடன் வாக்காளர் மத்தியில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலையை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடி கலபுரகி டவுனில் திறந்தவாகனத்தில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினார். ஊர்வலம் முடிவில் வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று மக்களை பார்த்து கையசைத்தார். முன்னதாக பிரதமர் மோடி கலபுரகி டி.ஆர். மைதானத்தில் போலீசாரின் சிறுவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது சிறுவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்டு உள்ளம் மகிழ்ந்தார்.

அதாவது பிரதமர் மோடி, சிறுவர்களிடம் நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்றும், வளர்ந்த பிறகு என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒவ்வொரு சிறுவர்களும் நான் டாக்டர் ஆவேன், நான் போலீஸ் அதிகாரி ஆவேன் என்று தங்களது கனவுகளை பகிர்ந்தபடி இருந்தனர். அப்போது ஒரு சிறுவன் தான் உங்களுக்கு செயலாளராக இருப்பேன் என்றான்.

இதை கேட்ட பிரதமர் மோடி ஏன் அப்பா... நீ பிரதமர் ஆக மாட்டாயா? என கேட்டதுடன் உங்களில் யாருக்காவது பிரதமர் ஆகும் ஆசை இல்லையா என வினவினார். அதற்கு சிறுவர்கள் சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தனர். இருப்பினும் ஒரு சிறுவன் நான் பிரதமர் ஆவேன் என்றான். அதை கேட்டு இன்முகம் காட்டிய பிரதமர் மோடி அனைத்து குழந்தைகளுக்கும் கையசைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News