உ.பி.யில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை: பட்டப்பகலில் நடந்த பயங்கரம்
- மாணவியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
- யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் கொலை சம்பவங்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியும் முன்னாள் எம்பியுமான அத்திக் அகமதுவை செய்தியாளர்கள் கண் எதிரிலேயே 3 பேர் சுட்டுக்கொன்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று கல்லூரி மாணவி பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஜலான் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரோஷினி அஹிர்வர் (வயது 21) என்ற அந்த மாணவி, தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியபோது பைக்கில் வந்த 2 நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடினர். அவர்களில் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மற்றொருவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மாணவி ரத்தவெள்ளத்தில் தரையில் கிடக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவண்ணம் உள்ளனர். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், 'அரசு சார்பு ஊடகத்தினரும், பாஜகவும் இந்த மரணத்தை கொண்டாடுவார்களா?' என கேள்வி எழுப்பி உள்ளது.